‘‘என் மகளை கொன்று விட்டனர்’’ – டிவி நடிகை சித்ராவின் தாய் கண்ணீர் பேட்டி

‘‘என் மகளை எனது மருமகன் அடித்துக் கொன்று விட்டார்’’ என்று தற்கொலை செய்து கொண்ட டிவி நடிகை சித்ராவின் தாய் கதறலுடன் கண்ணீர் பேட்டி அளித்துள்ளார்.

சென்னை கோட்டூரபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்ஐ காமராஜின் மகள் சித்ரா (வயது 29). பிரபல தனியார் டிவியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் சூட்டிங், சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. சித்ராவின் வீடு சென்னை திருவான்மியூரில் உள்ளதால் கடந்த 4ம் தேதி முதல் சித்ரா நசரத்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கி சூட்டிங்குக்கு போய் வந்தார்.

ஹேமந்த்துடன் அந்த ஓட்டலில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் சூட்டிங் முடிந்து ஓட்டல் ரூமிற்கு வந்தவர் பாத்ரூமில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ராவின் உடல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்து அவரது பெற்றோரிடம் இன்று காலையில் ஒப்படைக்கப்பட்டது.

அப்போது சித்ராவின் தாய் விஜயா நிருபர்களிடம் கூறியதாவது, ‘‘எனது மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை அல்ல. ஹேம்நாத் என் மகளை அடித்துக் கொலை செய்துவிட்டார், அவரை கைது செய்ய வேண்டும். சித்ராவை திருமணம் செய்து தராவிட்டால் நான் இறந்து விடுவேன் என்று கூறியதால்தான் என் மகளை திருமணம் செய்து கொடுத்தோம். இரண்டு வீட்டார் சம்மதத்தோடுதான் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் ஹேமந்த் முந்திக்கொண்டு அக்டோபர் மாதம் என் மகளை பதிவுத்திருமணம் செய்து கொண்டார். ஹேமந்த் நல்லவர் என்று நம்பி ஏமாந்து விட்டோம். இறப்பதற்கு முன்பு ஒரு சில மணி நேரத்துக்கு முன்பு சித்ராவுக்கு நான் போன் செய்தேன். அவர் சூட்டிங்கில் இருப்பதாக தெரிவித்தார். பிறகு கூப்பிடுகிறேன் என்று கூறினார். அதுதான் அவள் பேசிய கடைசி வார்த்தை. அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. என் மகள் சாவில் மர்மம் இருப்பதாக நான் போலீசில் புகார் அளித்துள்ளேன்’’ என கண்ணீருடன் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!