கொரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு ஓய்வூதியம் – மத்திய அரசு உத்தரவு

கொரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

இது குறித்து மத்தியப் பணியாளர் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியதாவது:

பணியில் இருக்கும் அரசு ஊழியர் இறந்தால், இறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டு, குடும்ப ஓய்வூதியம் கோரும்போது, ஒரு மாதத்திற்குள் குடும்ப ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்வதை தனிப்பட்ட முறையில் கண்காணிக்கும்படி அனைத்து துறை செயலாளர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதற்காக ஒவ்வொரு அமைச்சகம் மற்றும் துறைகளில் தனி அதிகாரிகளை, செயலாளர்கள் நியமித்து, அவர்களின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்களை சம்பந்தப்பட்ட அமைச்சகம் மற்றும் துறையின் இணையளத்தில் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை குடும்ப ஓய்வூதியம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டால், குடும்ப உறுப்பினர்கள் அந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியும். குடும்ப ஓய்வூதிய கோரிக்கைகளின் மாதாந்திர நிலவரத்தை ஒவ்வொரு அமைச்சகத்திற்கும் மற்றும் ஓய்வூதியர் நலத்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

கொரோனா தொற்றால் ஏற்படும் ஒவ்வொரு அம்சத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறார். அந்த உணர்வு மற்றும் கவலையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்துக்கு உதவுவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதியுடன் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Translate »
error: Content is protected !!