சென்னை,
சென்னை, நீலாங்கரை பகுதியில் ஆட்டோவில் 12 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த வடமாநிலத்தவர்கள் உள்பட 7 பேரை போலீசார் வாகன சோதனையின் போது கைது செய்தனர்.
நீலாங்கரை போலீசார் நேற்று காலை நீலாங்கரை, அக்கரைபக்தி, வேதாந்த சாலை அருகில் கண்காணிப்பு பணியில் இருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஆட்டோவில் இருந்த நபர்களை விசாரணை செய்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.
இதனால் போலீசார் ஆட்டோவுக்குள் சோதனை செய்தபோது அதற்குள் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதனையடுத்து அவற்றை பதுக்கிய வெட்டுவாங்கேனியைச் சேர்ந்த அபிஜித் போரா (36), கேளம்பாக்கம் சந்தோஷ் போகத் (29), செம்மஞ்சேரி அஜய் சேக்கியா (35), டுபுகசர் (28), பிரதீப் (35), டர்ஜோ (40), ஆட்டோ டிரைவர் பிரசன்னா (40) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 12 கிலோ எடை கொண்ட கஞ்சா மற்றும் பணம் ரூ. 8 ஆயிரத்து 970 மற்றும் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்டவர்களில் ஆட்டோ ஓட்டுநரை தவிர மற்ற 6 நபர்களும் வட மாநிலத்தவர்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட 7 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட உள்ளனர்.