சென்னை மேற்கு மாம்பலத்தில் கணவன், மனைவி அடுத்தடுத்து துாக்குப்போட்டு தற்கொலை

திருமணம் ஆகி பத்தே மாதங்களில் கணவன், மனைவி அடுத்தடுத்து துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, மேற்குமாம்பலம், ராஜா தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (36). இவரது மனைவி ராதிகா (வயது 30). இருவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களது சொந்த ஊர் மயிலாடுதுறை. சென்னையில் வேலை கிடைத்ததால் இருவரும் மேற்கு மாம்பலத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். ராதிகா கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்திலும், மணிகண்டன் பெரும்பாக்கத்தில் உள்ள கெமிக்கல் நிறுவனத்திலும் பணிபுரிந்து வந்தனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மணிகண்டனுக்க கொரானா தொற்று ஏற்பட்டதால் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்தார். அதில் இருந்து கணவன், -மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதற்கிடையில் ராதிகா குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு மண்ணெண்ணெய் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்பு அவர் மருத்துவமனை சென்று சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் மணிகண்டன் வழக்கம் போல பணிக்கு சென்று விட்டார். பகல் சுமார் 2 மணியளவில் மணிகண்டன் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு பேச முயன்றுள்ளார். ஆனால் ராதிகா நீண்ட நேரமாக போனை எடுக்க வில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சந்தேகப்பட்டு எதிர் வீட்டில் வசித்து வந்த வீட்டின் உரிமையாளர் தேவராஜுக்கு தகவல் கொடுத்து தனது வீட்டுக்கு போய் பார்க்க சொல்லியுள்ளார்.

அப்போது ராதிகா மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு துாக்கிச் சென்று பரிசோதனை செய்த போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் அசோக்நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராதிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்பு மணிகண்டன் மாலை 4. 30 மணியளவில் வீட்டுக்கு வந்தார். மனைவி துாக்கில் தொங்கிய அதே துப்பட்டாவால் அதே மின்விசிறியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம்பக்கம் உள்ளவர்கள் இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்க அசோக்நகர் போலீசார் மணிகண்டனின் வீட்டுக்கு வந்து அவரது உடலையும் மீட்டு ஓமந்துாரார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமான பத்து மாதங்களில் இருவரும் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மனைவி தற்கொலை செய்து கொண்ட சோகத்தில் கணவரும் அதே நாளில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேற்குமாம்பலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!