தாலிச்செயினை கொள்ளையனிடம் இருந்து மீட்டுக் கொடுத்த துணைக்கமிஷனருக்கு நினைவுப்பரிசு வழங்கி நன்றி தெரிவித்த தம்பதி

செயின் கொள்ளையனிடம் பறிபோன தாலிச்சங்கிலியை மீட்டுக் கொடுத்த அடையாறு துணைக்கமிஷனரை நேரில் சந்தித்து தம்பதியினர் நினைவுப்பரிசு வழங்கி நன்றி தெரிவித்தது காவல்துறையினரை நெகிழ வைத்துள்ளது.

சென்னை, ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கைவினை கலைஞர் கருணாமூர்த்தி. இவரது மனைவி கடந்த மாதம் 29ம் தேதியன்று ஈஞ்சம்பாக்கம் பகுதியில் வாக்கிங் சென்ற போது அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு பேர் அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர். அது தொடர்பாக நீலாங்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையில் நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

செயின் பறிப்பு நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது செயின் பறிப்பு ஆசாமிகள் தங்கள் பைக்கின் நம்பர் பிளேட்டை வேப்பிலையால் மறைத்திருந்தனர். அவர்கள் முகத்தில் மாஸ்க் அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. நீலாங்கரை உதவிக்கமிஷனர் விஸ்வேஸ்வரய்யா மேற்பார்வையிலான தனிப்படையினர் செயின் பறிப்பு நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி கேமரா விடா முயற்சியுடன் அடுத்தடுத்து காட்சிகளை ஆய்வு செய்து முன்னால் செயின் பறிப்பு கொள்ளையன் நடராஜ் (எ) நவமணி (வயது 28) என்பவரை நீலாங்கரை போலீசார் கைது செய்தனர்.

அவனிடமிருந்து 5 சவரன் செயினையும் கைப்பற்றி புகார்தாரர் கருணாகரனிடம் ஒப்படைத்தனர். தான் பறிகொடுத்த செயினை திரும்பப் பெற்ற மகிழ்ச்சியில் கருணாகரனும் அவரது மனைவியும் நேற்று அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமனை அவரது அலுவலகத்தில் சந்தித்து கைகூப்பி நன்றி தெரிவித்தனர். மேலும் கருணாகரன் கடந்த பத்து நாட்களாக தான் கைப்பட செய்த பிள்ளையார் ஓவியத்தை நினைவுப்பரிசாக துணைக்கமிஷனர் விக்ரமனுக்கும், நீலாங்கரை உதவிக்கமிஷனர் விஷ்வேஷ்வரய்யாவுக்கும் வழங்கினர். புகார்தாரர் மனம் மகிழ்ந்து காவல்துறை அதிகாரிக்கு தங்களது நினைவாக அன்புப்பரிசை வழங்கியது அடையாறு காவல் மாவட்ட போலீசார் மத்தியில் நெகிழ்வை ஏற்படுத்தியது.

Translate »
error: Content is protected !!