நாகூரில் ஆன்மிக அரசாட்சி! எஜமான் நாகூர் காதிர் வலி சாகுல் ஹமீது நாயகம் கஞ்ச சவாயி ரழியல்லாஹு அன்ஹு

நாகூர் என்ற பெயரைக் கேட்டாலே, உடனே நம் நினைவுக்கு வருவது நாகூர் தர்காவில் வீற்றிருக்கும் அல்லாஹ்வின் தவசீலர் என போற்றப்படும் சங்கைக்குரிய குதுபுல் ஹமீது ஹஜ்ரத் செய்யிது ஷாஹுல் ஹமீது மீரான் சுல்தான் நாயகம் (ரழி) அவர்கள். மாபெரும் இறைநேசச் செல்வரான ஹஜ்ரத் நாகூர் ஷாஹுல் ஹமீது (ரழி) அவர்களின் புனித அடக்கஸ்தலம் நாகூர் கடற்கரையோரம் அமைந்துள்ளது.

 

ஒவ்வொரு ஆண்டும் நாகூர் நாயகத்தின் கந்தூரி விழா இஸ்லாமிய மாதமான ஜமாத்துல் ஆகிர் மாதம் முதல் நாள் தொடங்கி 15 நாட்கள் நடைபெறுகின்றன. இந்த விழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பாகிஸ்தான், அரேபியா, பர்மா, மற்றும் இந்தியாவின் ஏனைய மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் என உலகெங்கும் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்து கலந்து திரளாக வந்து கலந்து கொண்டு செல்கின்றனர். உலக மக்களால் எஜமான் ஆண்டவர்கள், கருணைக் கடல், நாகூர் நாயகம் என போற்றப்படும் சாகுல் ஹமீது காதிர்வலி ரழி அவர்களது வாழ்க்கை வரலாறு மிக அரிய பொக்கிஷம் ஆகும்.

கிபி 15ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஹஜ்ரத் ஷாகுல் ஹமீது (ரழி) அவர்கள் இஸ்லாத்தை பரப்புவதற்காக தங்களது 404 சீடர்களுடன் தமிழகம் நாகப்பட்டினத்துக்கு வந்தார்கள். அவர்களது நாகூர் வருகைக்கு பின்னர், தமிழகத்தில் இஸ்லாம் தழைத்தோங்கி வளர்ந்தது. முஸ்லிம்கள் மட்டுமின்றி வேற்று மதத்தினரும் நாகூர் நாயகம் அவர்கள் மீது மதிப்பும், மரியாதையும், கண்ணியமும் வைத்து அவர்களை போற்றி கொண்டாடுகின்றனர். இது அல்லாஹ் சுபுஹானத்தஹுத்தஆலா நாகூர் நாயகம் அவர்களுக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை எனலாம்.

ஹஜ்ரத் நாகூர் ஷாஹுல் ஹமீது ஒலி பாதுஷா (ரழி) அவர்கள் வட இந்தியாவில் அயோத்தியாவிற்கு அருகில் மாணிக்கப்பூர் என்ற ஊரில் ஹிஜ்ரி 910ம் ஆண்டு (கிபி 1491) ரஜபு பிறையில் இவ்வுலகில் தோன்றினார்கள். அவர்களது தந்தை ஹஸ்ரத் சையத் ஹசன் குத்தூஸ், தாயார் பீபி பாத்திமா. ஷாகுல் ஹமீது நாயகம் அவர்கள் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் 22 ஆவது பரம்பரையிலும், வலிமார்களின் தலைவர் என அல்லாஹ்வால் போற்றப்பட்ட குத்புல் அக்தாப் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரழி) அவர்களின் 9வது பரம்பரையிலும் வந்துதித்தவர்கள் ஆவார்கள்.

நாகூர் ஷாகுல் ஹமீதுதொலி பாதுஷா அவர்கள் பிறப்பதற்கு முன்பு ஒருநாள் அவர்களின் தாயார் அவர்கள் நபிகள் நாயகத்தை கனவில் கண்டார்கள். ‘‘உங்கள் வயிற்றில் ஒரு பேரொளி உதித்துள்ளது. பிறக்கப் போவது ஆண் மகவு. அவர் மிகப்பெரும் இறைநேசச் செல்வராகவும், தனது வாழ்வை இஸ்லாத்துக்காகவும், மக்களை பாதுக்காக்கவும் செலவழிப்பார்’’ என பெருமானார் அருளி விட்டு சென்றார்கள்.

அதன் படியே ஷாகுல் ஹமீது நாயகம் அவர்கள் சிறு வயது முதலே ஆழ்ந்த அறிவுடையவர்களாகவும், மிக சிறந்த ஒழுக்க சீலராகவும், அல்லாஹ்வின் மீது அளவற்ற பற்றுடையவர்களாகவும் இருந்தார்கள். 8 வயதிலேயே, குர்ஆனை கற்று, ஓதி அதனை மனனம் செய்தார்கள். அரபு மொழியின் இலக்கணத்தையும் கற்று அறிந்தார்கள். அவர்களது தீராத இறைநாட்டம் தமக்கு ஆன்மிக கல்வியை போதிப்பதற்காக ஷெய்குவை (வழிகாட்டி) தேடிச் சென்றார்கள். குவாலியூர் சென்று அங்கு ஹஸ்ரத் சையத் முஹம்மத் கவுஸ் சாஹிப் அவர்களது அரபி கல்விக் கூடத்தில் சேர்ந்து ஆன்மிகம் பயின்றார்கள்.

    சுமார் 10 வருடங்கள் பயிற்சி பெற்ற பின்னர் அங்கிருந்து வெளியேறி அவர்களின் 404 சீடர்களுடன் மாணிக்கப்பூர் சென்றார்கள். பின்னர் ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான் மற்றும் பல்வேறு இடங்களுக்குப் பிரயாணம் செய்து இஸ்லாமிய தஃவா பணி செய்தார்கள். அப்போது ஷாகுல் ஹமீது நாயகம் அவர்கள் அல்லாஹ்வின் அருளால் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தினார்கள். இறந்தவர்களை உயிர்ப்பித்தல், பிறவி ஊமையை பேச வைத்தல், முடவர்களை மீண்டும் நடக்கச் செய்தல் என தீர்க்க முடியாத பல்வேறு நோய்களை சுகப்படுத்துதல் என பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார்கள்.

பின்பு ஷாகுல் ஹமீது நாயகம் (ரழி) அவர்கள் மக்காவுக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொண்டார்கள். வழியில் லாகூரில் உள்ள ஒரு பள்ளிவாசலில் தங்கி இருந்தார்கள். அப்போது ஹஸ்ரத் நூர்தீன் சாஹிப் என்னும் ஒரு முஸ்லிம், நாகூர் நாயகத்தை சந்தித்து தனக்கு குழந்தை இல்லை என கூறி கலங்கி நின்றார். நாகூர் நாயகம் அவர்கள் சில வழிமுறைகளை சொல்லிக்கொடுத்து அல்லாஹ்விடம் குழந்தை கிடைக்கவேண்டி துஆ செய்தார்கள். அவர்களின் துஆ பரக்கத்தினால் அவரது மனைவி கருவுற்று சையத் முஹம்மத் யூஸுப் சாஹிப் என்னும் ஒரு இறைநேசரை ஈன்றெடுத்தார்கள்.

நாகூர் ஷாகுல் ஹமீது நாயகம் (ரழி) அவர்கள் தங்களது 404 சீடர்களுடன் (மாணவர்கள்) இலங்கை, பர்மா ஆகிய இடங்களுக்கு சென்று இஸ்லாத்தை பரப்பும் பணியில் ஈடுபட்டார்கள். பின்னர் தூத்துக்குடி காயல்பட்டினம், கீழக்கரை, தென்காசி என பல்வேறு இடங்களுக்கு சென்று அங்கு பல நாட்கள் தங்கியிருந்து இஸ்லாமிய பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.

இறுதியாக ஷாகுல் ஹமீது நாகூர் நாயகம் (ரழி) அவர்கள் தங்களது 40வது வயதில் தஞ்சாவூர் வந்தார்கள். அப்போது நாயக்கர் வம்சத்தினர் ஆட்சி செய்து கொண்டு இருந்தனர். அங்கே தீராத நோயால் நீண்ட காலம் பாதிக்கப்பட்டு மன்னர் அச்சுதப்ப நாயக்கர் வாழ்ந்து வந்தார். மன்னரின் அமைச்சர்கள் நாகூர் நாயகத்தை அணுகி, மாளிகைக்கு வந்து மன்னருக்கு உதவுமாறு வேண்டி நின்றனர். நாகூர் நாயகம் அவர்கள் அங்கே சென்று மன்னருக்கு சூனியம் செய்யப்பட்டு உள்ளதையும் ஒரு புறாவின் உடலிலே பல்வேறு முட்களை கொண்டு குத்தப்பட்டு நோவினை செய்யும் விதத்தில் சூனியம் செய்யப்பட்டுள்ளதையும் அறிந்து கொண்டார்கள். தன் மகனை அனுப்பி, அந்த புறாவை கொண்டு வரச்செய்து, ஓதி ஒவ்வொரு முள்ளாக அந்த புறா உடம்பில் இருந்து கழற்றி எடுத்தார்கள். அனைத்தும் நீங்கியவுடன் மன்னர் பரிபூரண சுகமடைந்தார்.

கண்ணெதிரே நடந்த அற்புதத்தை பார்த்து கொண்டிருந்த மகாராணி, ஷாகுல் ஹமீது ஒலியிடம் தனக்கும் மன்னருக்கும் குழந்தை பாக்கியம் இல்லா குறையை சொல்லி தமக்கு உதவுமாறு காலில் விழுந்து கேட்டார். நாகூர் நாயகம் அவர்கள் அவ்வாறே துஆ (பிரார்த்தனை) செய்ய, அவர்களுக்கு நல்ல ஒரு சந்ததி உண்டாயிற்று. நாகூர் நாயகம் அவர்களின் இப்பெரிய உதவிகளுக்கு கைமாறாக மன்னர் பல சொத்துக்களையும் பணங்களையும் கொடுத்தார். ஆனால் ஷாகுல் ஹமீதொலி பாதுஷா நாயகம் அவர்கள் அவற்றை வேண்டாம் என தவிர்த்து விட்டார். இதனையடுத்து நாகூர் கடலோரத்தில் தனக்கு ஒரு துண்டு நிலம் தருமாறு மட்டும் கேட்டுக்கொண்டார்கள். அதன்படி, மன்னர் கடலோரத்தில் சுமார் 30 ஏக்கர் நிலத்தை ‘‘சுவர்க்க பூமி’’ என கூறி நாகூர் நாயகம் அவர்களுக்கு காணிக்கையாக அளித்தார். அந்த இடத்தில்தான் தற்போதைய நாகூர் தர்கா மற்றும் கட்டடங்கள் அமையப்பெற்றுள்ளன.

நாகூர் நாயகம் அவர்கள் ரஜப் மாதம் நாகூருக்கு சுமார் 2 மைல் தூரத்தில் உள்ள வஞ்சூர் என்னும் ஊருக்கு சென்று மரப்பலகையினால் மூடப்பட்ட ஒரு குழிக்குள் இருந்து 40 நாட்கள் நோன்பு நோற்றார்கள். அந்த இடத்திலேயே தற்போதைய வஞ்சூர் பள்ளிவாசல் அமையப்பெற்றுள்ளது. மேலும் நாகூர் கடலோரத்திற்கு அண்மையில் அமைந்துள்ள சில்லடி பள்ளிவாசலிலும் 40 நாட்கள் நோன்பு நோற்றார்கள்.

ஹிஜ்ரி 978ம் ஆண்டு ஜமாதுல் ஆகிர் பிறை 10–ல் ஷாகுல் ஹமீது அப்துல் காதிர் கஞ்சசவாயிர் பாதுஷா நாயகம் அவர்கள் தமது 68 ஆம் வயதில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் இப்பூவுலகை விட்டும் மறைந்தார்கள். அந்த நாளைத்தான் அவர்களது நினைவு நாளாக நாகூர் தர்காவில் சந்தனம் பூசி, ‘கந்தூரி விழா’ வாக கொண்டாடுகின்றனர். அவர்களின் அறிவுரையின்படியே அவர்களது புனித மண்ணறை (கப்ர்) அமைக்கப்பெற்றது. அவர்களின் புனித மண்ணறைக்கு வலது பக்கத்தில் அவர்களின் மகனார் மற்றும் மருமகளின் புனித மண்ணறைகள் அமையப்பெற்றுள்ளன.

அவர்கள் மறைந்தாலும், அவர்களது ஆன்மிகப் புகழ் மங்காமல் இன்னும் தழைத்தோங்கி நிற்கிறது. நாகூர் தர்காவை நாடி செல்பவர்களின் நாட்ட தேட்டங்கள் அல்லாஹ்வின் கிருபையாலும், ஷாகுல் ஹமீது ஒலி பாதுஷாவின் துஆ பரக்கத்தாலும் அனைத்தும் நிறைவேறுகின்றன என்கின்றனர் அங்கு வரும் பக்தர்கள்.

– எம்.எச்.

Translate »
error: Content is protected !!