மலையாள பிக்பாஸ் அரங்கிற்கு சீல்..?

ஆறு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகும் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்திய மலையாள பிக் பாஸ் அரங்கிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த பிக் பாஸ் பங்கேற்பாளர்கள் வெளியேற்றப்பட்டு, சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மோகன்லால் தொகுத்து வழக்கும் பிக்பாஸ் மலையாளம் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சென்னைக்கு அருகில் பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிடியில் அரங்கு அமைத்து நடைபெற்றுவந்தது. இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் தவிர பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்களும் இந்த அரங்கில் பணியாற்றிவந்தனர். சில நாட்களுக்கு முன்பாக இந்த ஊழியர்கள் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.

ஆனால், அதற்குப் பிறகும் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்துவந்தது. “படப்பிடிப்பே நடத்தக்கூடாது என்ற நிலையில், தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். இவர்கள் படப்பிடிப்பில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வெளியிலிருந்து உணவு தொடர்ந்து சென்றுகொண்டிருந்தது. அவர்களைப் பின்பற்றி உள்ளே சென்றோம். உள்ளே 60க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றிவந்தனர்.

இதற்குப் பிறகு விசாரணை நடத்தி அரங்கை மூடி சீல் வைத்திருக்கிறோம். அரங்கில் பங்கேற்பாளர்களாக இருந்த ஆறு பேர் வெளியேற்றப்பட்டனர். மற்ற ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர்என பிபிசியிடம் தெரிவித்தார் திருவள்ளூர் மாவட்ட துணை ஆட்சியர் ப்ரீத்தி பார்கவி. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களிடம் விசாரணை நடத்திய பிறகு பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005ன் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. மேலும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

அரங்கில் இருந்த நடிகர், நடிகைகள் தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியேற அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. அவர்கள் பிபிஇ கிட், முகக் கவசம் அணிந்து தங்கள் உடமைகளுடன் அங்கிருந்து வெளியேறினர். இப்படி வெளியேறியவர்கள் ஒரு இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். அங்கு பணியாற்றிவந்த 60க்கும் மேற்பட்ட ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர்.

இந்த அரங்கில் ஊரடங்கு காலம் முடியும்வரை தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. வெளியேற்றப்பட்ட நடிகர், நடிகைகளுக்கு தற்போது பாஸ் எடுக்கப்பட்டு, அவர்கள் கேரளாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் ப்ரீத்தி பார்கவி தெரிவித்தார். மலையாளம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸன் இப்போது நடைபெற்று வருகிறது.

இது ஏசியா நெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியில் மணிக்குட்டன், மிச்செல் ஆன் டேனியல், நோபி மார்கோஸ், ரெம்யா பணிக்கர், அனூப் கிருஷ்ணன், சாய்னா ஃபிரோஸ், ஏஞ்சல் தாமஸ், சாய் விஷ்ணு, சூர்யா மேனன், ஃபிரோஸ் கான், ஃபிரோஸ் அஜீஸ், லக்ஷ்மி ஜெயன், ரிது மந்த்ரா, ரம்ஜான் முகமது, சந்தியா மனோஜ், பாக்யலட்சுமி, டிம்பல் பால் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

ஃபிப்ரவரி 14ஆம் தேதி துவங்கிய இந்த நிகழ்ச்சி, ஜூன் மாத மத்தியில் நிறைவுக்கு வருவதாக இருந்தது.

Translate »
error: Content is protected !!