மாணவர் தற்கொலை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷின் மரணத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்த மாணவருக்கு அஞ்சலி செலுத்தி, அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தும் மிகப்பெரிய சிரமங்களைப் புரிந்து கொள்ளாத மத்திய அரசின் அலட்சியமும், பிடிவாதமும், மாணவ, மாணவிகளின் தற்கொலைக்கு காரணமாக அமைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நீட் தேர்வில் முறைகேடு, கேள்வித்தாள் லீக், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளும், தொடரும் தற்கொலைகளும், மத்திய அரசின் மனதை மாற்றவில்லை என்பது, கல்வி மாநிலப் பட்டியலுக்கு வந்தே தீர வேண்டும் என்ற அவசியத்தை மேலும் வலுவடைய செய்வதாக, முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நாளை சட்டமன்றத்தில் நிறைவேற இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். எனவே மாணவச் செல்வங்கள் மனம் தளர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ள முதலமைச்சர், மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்துத்தரும் பொறுப்பும், கடமையும் அரசுக்கு இருப்பதாகவும், நீட் தேர்வை மத்திய அரசு நீக்கும் வரை தமிழக அரசின் சட்டரீதியான போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!