யானைக்கவுனியில் சுட்டுக் கொல்லப்பட்ட குடும்பத்தின் உறவினர் தற்கொலை: வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு

சென்னை யானைக்கவுனியில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், போலீசார் விசாரணை என்ற பெயரில் கொடுத்த மன உளைச்சலினால் தலிசந்த்தின் உறவினர் விஜயகுமார் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, யானைக்கவுனியில், பைனான்சியர் தலிசந்த் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் பிடிபட்ட ஜெயமாலா மற்றும் சகோதரர்கள் கைலாஷ் விலாஸ் ஆகியோர், ஷீத்தல் குடும்பத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக ஜெயமாலா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கணவர் ஷீத்தல் குடும்பத்தை சேர்ந்தவர்களை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஷீத்தல் குடும்பத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரை போலீசார் விசாரணைக்காக அழைத்தனர். இதில் மனம் உடைந்த விஜயகுமார் நேற்று காலை தான் தங்கியிருந்த சென்னை, ஆர்கே நகர் பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து, கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆர்கே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விஜயகுமாரின் செல்போனை போலீசார் ஆய்வு செய்ததில் வீடியோ வாக்குமூலம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘எனது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சோகத்தில் இருக்கிறோம். கொலை செய்த 6 பேரை போலீசார் விசாரிக்காமல், அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து என்னையும், எனது உறவினர் ஹேமந்த் என்பவரையும் அடிக்கடி போலீசார் விசாரணை செய்கின்றனர். இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனது ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள், இதற்கு உதவ வேண்டும். குறிப்பாக நானும், என் குடும்பத்தில் உள்ள குழந்தைகளும் போலீஸ் விசாரணைக்கு பயந்து, ஒழுங்காக உணவு கூட உண்ண முடியவில்லை’’ என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வாக்குமூலம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் போலீசார் ஒப்படைத்துள்ளனர். துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் தலிசந்த் உறவினர் விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!