சென்னை,
வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரெயிலை இம்மாத இறுதியில் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் என்று கவர்னர் தெரிவித்தார்.
நடப்பு ஆண்டின் சட்டசபை முதல் கூட்டத்தொடரை கவர்னர் இன்று துவக்கி வைத்து உரையாற்றினார். சென்னை மெட்ரோ ரெயில் திட்டம், கட்டம்-–1–ன் கீழ், வண்ணாரப்பேட்டையிலிருந்து விம்கோ நகர் வரையிலான நீட்டிப்பு வழித்தடத்தில் பயணிகள் சேவை விரைவில் பாரதப் பிரதமரால் இம்மாத இறுதியில் தொடங்கி வைக்கப்படும்.
மத்திய உள்துறை அமைச்சரால், 61,843 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 118.9 கி.மீ. நீளம் கொண்ட சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இத்திட்டத்திற்கான நிதியை ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமை, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய வளர்ச்சி வங்கி ஆகியவை வழங்குகின்றன. இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு 50:50 பகிர்வு அடிப்படையில், மத்திய அரசு தங்களுடைய பங்கு மூலதனத்திற்கு ஒப்புதலை வழங்க வேண்டும் என்று நாங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.