ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலை

ஓட்டல் அறையில் ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலுார் மாவட்டம், பழைய வண்டிப்பாளையம், ஆலைத்தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 26). கடந்த 2013ம் ஆண்டு முதல் சென்னை நகர ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 16ம் தேதி முதல் இவர் பணிக்கு வராமல் பெரியமேட்டில் உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு விடுதியின் பொறுப்பாளர் சுரேஷ் தங்கியிருந்த அறையின் கதவை தட்டியுள்ளார்.

நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் பெரியமேடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கையில் ஆயுதப்படை காவலர் சுரேஷ் இறந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது அறையை சோதனை நடத்திய போது அங்கு சுரேஷ் எழுதிய தற்கொலை கடிதத்தை கைப்பற்றினர். அதில் தனது இறப்பு தொடர்பாக யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என சுரேஷ் தெரிவித்துள்ளார். மன உளைச்சல் காரணமாக சுரேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!