இந்தியாவுக்கு விரைவில் வருமாறு சவுதி பட்டத்து இளவரசருக்கு பிரதமர் மோடி மீண்டும் அழைப்பு விடுத்தார்.
பிரதமர் நரேந்திர மோடியும், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானும் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது கடந்த 2019-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இருதரப்பு ஒத்துழைப்பு கவுன்சிலின் செயல்பாடுகள் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்ததுடன், அவற்றின் செயல்பாடுகளில் திருப்தியும் வெளியிட்டனர்.
மேலும் இந்த உரையாடலின்போது, இருதரப்பு வர்த்தக உறவு மற்றும் முதலீடுகளை விரிவுபடுத்துவதன் நோக்கம் குறித்து பிரதமர் மோடி எடுத்துரைத்தார். மேலும் சவுதி அரேபியா முதலீட்டாளர்களுக்கு இந்திய பொருளாதாரம் வழங்கியுள்ள வாய்ப்புகளையும் அவர் சுட்டிக்காட்டினார்
கொரோனாவுக்கு எதிராக இரு நாடுகளும் எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஒருவரையொருவர் ஆதரிப்பது என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதுடன், பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் இருவரும் விவாதித்தனர். இந்தியாவுக்கு விரைவில் வருமாறு சவுதி பட்டத்து இளவரசருக்கு பிரதமர் மோடி மீண்டும் அழைப்பு விடுத்தார்.