இன்று முதல் நியாய விலைக்கடைகள் இயங்கும் – தமிழக அரசு அறிவிப்பு

முழு ஊரடங்கில் பொதுமக்கள் நலன் கருதி ரேஷன் கடைகள் இன்று முதல் இயங்கும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் குறையாததால் நேற்று முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் எந்த தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதில் நியாயவிலைக்கடைகளும் அடைக்கப்பட்டன. இந்நிலையில் பொதுமக்கள் நலனுக்காக ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்று தமிழக அரசு நேற்று தளர்வு அறிவிப்பை வெளியிட்டது.

இது குறித்து தமிழக அரசின் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் வெளியிட்டுள்ள உத்தரவில்,

‘‘கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கு 24-ந் தேதி (நேற்று) முதல் ஒரு வார காலத்துக்கு எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்காக நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது. இச்சூழ்நிலையில், பொது மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியப் இன்றியமையாப் பண்டங்களாகிய அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொது வினியோகத் திட்ட பண்டங்களை தொடர்ந்து பெறும் வகையிலும்,

கொரோனா முதற்கட்ட நிவாரணத்தொகை ரூ. 2 ஆயிரத்தை இதுவரை பெறாதவர்கள் பெறும் வகையிலும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ள சூழலிலும் அனைத்து ரேஷன் கடைகளிலும் 25-ந் தேதி முதல் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை வினியோகம் செயல்படுத்தபட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினால் உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது’’. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!