காணாமல் போன ரூ. 1 கோடி மதிப்புள்ள செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீஸ் கமிஷனர்

சென்னை நகரில் காணாமல் போன மற்றும் திருடு போன ரூ. 1 கோடி மதிப்புள்ள 863 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு செல்போன் உரிமையாளர்களிடம் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மூலம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை நகரில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட செல்போன் பறிப்பு மற்றும் செல்போன் காணமால் போன வழக்குகளை விரைந்து விசாரணை செய்து செல்போன்களை மீட்கும் முயற்சியில் காவல்துறையினர் மிகவும் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். சென்னை நகரில் உள்ள 4 மண்டல இணை ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில் 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்கள் தலைமையில், உதவி ஆணையர்கள், குற்றப்பிரிவு ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் சமீபத்தில் துவக்கி வைக்கப்பட்ட 12 காவல் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு அமைக்கப்பட்டது.

செல்போன்களின் ஐஎம்இஐ குறியீட்டு எண்களை கொண்டும், செல்போன் நிறுவனங்களின் உதவியோடும் அவற்றை தனிப்படை போலீசார் மீட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள 4 காவல் மண்டலங்களிலும், செல்போன் திருட்டு மற்றும் செல்போன் காணாமல் போன வழக்குகளில் திறம்பட செயல்பட்டு, வடக்கு மண்டலத்தில் 280 செல்போன்கள், மேற்கு மண்டலத்தில் 175 செல்போன்கள், தெற்கு மண்டலத்தில் 205 செல்போன்கள், கிழக்கு மண்டலத்தில் 203 செல்போன்கள் என மொத்தம் ரூ.1 கோடி மதிப்புள்ள 863 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றில் பெரும்பாலான செல்போன்கள் சென்னை மட்டுமல்லாது, பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழக மாவட்டங்களில் இருந்து கைப்பற்றப்பட்டு கொண்டு வரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியின் அடையாளமாக, இன்று (22.12.2020) மாலை, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் 120 செல்போன்களை, 12 காவல் மாவட்டங்களிலிருந்தும் வந்த செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். மீதம் கண்டறியப்பட்டுள்ள செல்போன்கள் அந்தந்த காவல் மாவட்ட உயரதிகாரிகள் மூலம் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. மேலும் கடந்த 18.09.2020 அன்று 1,193 செல்போன்கள் கண்டறியப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்ச்சியில் சென்னை நகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அமல்ராஜ், தினகரன், அருண், இணைக்கமிஷனர் சுதாகர், பாலகிருஷ்ணன், மகேஷ்வரி, பாபு மற்றும் துணை ஆணையாளர்கள் காவல் அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!