காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுப்பு – டிஜிபி திரிபாதி உத்தரவு

தமிழக காவல்துறையில் கொரோனா பெருந்தொற்றால் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுவதால், சுழற்சி முறையில் காவல்துறையினருக்கு வழங்கிய விடுப்பை அதிகரித்து டிஜிபி திரிபாதி வாய்மொழி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்தாலும், முன்களப் பணியாளர்களாக உள்ள காவல்துறையினர் 84 பேர் இதுவரை உயிரிழந்துவிட்டனர். மேலும் ஏராளமானோர் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பால் காவல்துறையினர் மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர். இப்பிரச்னையிலிருந்து அவர்களை மீட்க சுழற்சி முறையில் விடுப்பு வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பிலிருந்து டிஜிபிக்கு வேண்டுகோள்கள் சென்றன.

அந்த வேண்டுகோளை ஏற்ற டிஜிபி திரிபாதி மண்டல ஐஜிக்கள், அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு வாய்மொழி உத்தரவு ஒன்றை டிஜிபி திரிபாதி பிறப்பித்துள்ளார். அதாவது, சுழற்சி முறையில் 20 சதவிகித காவலர்களுக்கு விடுப்பு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே 10 சதவிகித காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது 20 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Translate »
error: Content is protected !!