“கோ படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது”.. கே.வி. ஆனந்த் மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல்

கே.வி. ஆனந்த் மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரான கே.வி. ஆனந்த், கனா கண்டேன் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார்.

கோ, அயன், மாற்றான், அனேகன், கவண், காப்பான் எனப் பல படங்களை இயக்கியுள்ளார். தமிழ்ப் பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராக ஆரம்பத்தில் பணியாற்றிய கே.வி. ஆனந்த், பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார்.

கடைசியாக சூர்யா நடித்த காப்பான் படத்தை இயக்கினார். இந்நிலையில் கே.வி. ஆனந்த் மாரடைப்பால் இன்று காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 54. கே.வி. ஆனந்தின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் கே.வி. ஆனந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சிம்பு கூறியிருப்பதாவது:

அதிர்ந்து பேசாத நல்ல மனிதர் கே.வி. ஆனந்த். கோ படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. அப்போதிருந்த சூழலில் தவிர்க்கும்படியாகிவிட்டது. சமீபத்தில் மிக அருமையான கதை ஒன்றை எனக்குச் சொல்லியிருந்தார். சேர்ந்து படம் பண்ணலாம் எனச் சொல்லியிருந்தேன். தினமும் என்னோடு தொடர்பிலிருந்தார். நேற்று வரை பேசிக்கொண்டிருந்தவர் இன்று அதிகாலை மரணமடைந்துவிட்டார் என்று சொல்வதை மனம் நம்ப மறுக்கிறது. பொய்ச்செய்தியாக இருக்கக்கூடாதா என அங்கலாய்க்கிறேன். இவ்வளவு சீக்கிரம் அவரை இழந்திருப்பது மிகுந்த வருத்தத்துக்குரியது என்று கூறியுள்ளார்.

Translate »
error: Content is protected !!