தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின – பேருந்து நிலையங்களில் தவித்த மக்கள்

சென்னை,

தமிழகம் முழுவதும் நேற்று இரவு நேர ஊரடங்கை முன்னிட்டு இரவு 9 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

மேம்பாலங்கள் மூடப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பேருந்து நிலையங்களில் 10 மணிக்கு வந்த பயணிகள் ஊருக்கு செல்ல முடியாமல் அங்கேயே உறங்கி அதிகாலையில் புறப்பட்டு சென்றனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும். இரவு ஊரடங்கு நேரத்தில் அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து, வாடகை கார், ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.

வெளி மாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கான பஸ் போக்குவரத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவசர மருத்துவ தேவைகளுக்கு, விமான நிலையம், ரயில் நிலையம் செல்வதற்கும் வாடகை கார், ஆட்டோ, தனியார் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க்குகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் கடைகள் இரவு 9 மணிக்கு அடைக்கப்பட்டன. போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். சென்னையில் 200 இடங்களில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனை நடைபெற்றது. காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

ஊரடங்கை மீறி வெளியில் நடமாடுவோரை எச்சரித்து காவல்துறையினர் திருப்பி அனுப்பி வைத்தனர். பல பயணிகள் பேருந்து நிலையங்களில் சிக்கித்தவித்தனர். தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கின் முதல் நாள் இன்று காலை 4 மணியோடு நிறைவு பெற்றது. பேருந்துகள் இல்லாமல் பேருந்து நிலையங்களிலேயே தங்கியிருந்த பயணிகள் பலர் அதிகாலை 4 மணி முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கிய உடன் புறப்பட்டு சென்றனர்.

வெளி மாவட்டங்களுக்கான தொலைதூர பேருந்து சேவைகளில் தொடங்கின. மக்கள் இடைவெளியுடன் அமர்ந்து பயணித்தனர். பால், செய்தித்தாள் விநியோகம் உள்ளிட்ட பணிகளும் நடைபெறத் துவங்கியுள்ளன. மாநிலம் முழுவதும் தேநீர் கடைகள், ஹோட்டல்கள் திறக்கப்பட்டன. இந்த இரவு நேர ஊரடங்கானது இன்று இரவு 10 மணிக்கு மீண்டும் அமலுக்கு வருகிறது.

24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும் தொழிற்சாலைகள் இயங்கவும், அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அடையாள அட்டை அல்லது குறிப்பிட்ட நிறுவனத்தின் அனுமதி கடிதத்தை கையில் வைத்திருக்க வேண்டும்.

Translate »
error: Content is protected !!