திருட முயன்ற வாலிபர்களை பொதுமக்கள் தாக்கியதால் ஒருவர் மரணம், மற்றொரு நபர் கைது – போலீசார் விசாரணை

சுவர் ஏறி குதித்து திருட முயன்ற கேரள வாலிபர்களை விரட்டி பிடித்து பொதுமக்கள் தாக்கியதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் மரணம், மற்றொரு நபர் கைதுபோலீசார் விசாரணை.

திருச்சி ஜீயபுரம், அல்லூரில் வசித்து வருபவர் வெங்கடேசன், இவரது வீட்டில் இன்று காலை இரண்டு திருடர்கள் சுவர் ஏறி குதித்து திருட முயன்றதாக கூறப்படுகிறது. இதனை கண்ட வெங்கடேசன் அதிர்ச்சி அடைந்து அபயக் குரல் எழுப்பியுள்ளார்.

வெங்கடேசனின் அபய குரலை கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ,அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடிக்க முயன்றனர். அப்போது இருவரில் ஒருவன் தன் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி அனைவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினான்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் கத்தியை தட்டிவிட்டு அவனை பிடித்து சரமாரியாக தாக்கினர். இச்சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனிடையே இளைஞர்கள் தாக்கியதால் படுகாயமடைந்த திருடனை அங்கிருந்த ஒரு மினி லாரியில் ஏற்றி திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவனை போலீசார் முன்னிலையில் இளைஞர்கள் மீண்டும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனை தடுத்து நிறுத்திய போலீசார் திருடனை சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சூழ்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருட வந்த மற்றொரு நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் இளைஞர்கள் தாக்கியதால் படுகாயமடைந்த தீபு (வயது 25) என்கிற அந்த இளைஞன் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள மாங்காட்டுகரவர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் மற்றொரு திருடன் அவனது நண்பனான கேரள மாநிலம் கிருஷ்ண கிருபா பகுதியை சேர்ந்த பாபுல்லேயன் மகன் அரவிந்த் (வயது 24) என்பதும் தெரியவந்தது.

இதனிடையே திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபு இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து அல்லூர் கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட வந்த இடத்தில்
திருடன் பொதுமக்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Translate »
error: Content is protected !!