புயல் பாதிப்புகளால் ஏற்பட்டுள்ள சேதங்களை நேரில் பார்வையிட மத்திய குழு நாளை தமிழகம் வருகை

இயற்கை பேரிடர்கள் ஏற்படும்போது மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி உள்ளிட்ட உதவிகளை செய்வது வழக்கமாக உள்ளது. முன்னதாக பேரிடரால் ஏற்பட்டுள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டு அவற்றை கணக்கிட்டு அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய அரசின் உயர் அதிகாரிகளை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு மத்திய அரசு அனுப்பி வைக்கும். தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் நிவர் புயல் வீசியது. அப்போது காற்று பலமாக வீசியதோடு கன மழையும் பெய்தது. இதனால் ஏராளமான வாழை, தென்னை போன்ற மரங்கள் சரிந்தன. நெல் உள்ளிட்ட பயிர்கள் நீருக்குள் மூழ்கின.

பல கால்நடைகள் இறந்ததோடு வீடுகளும் சேதமடைந்தன. இவற்றுக்கு இழப்பீட்டை வழங்கும்படி மக்கள் பலர் கோரிக்கை விடுத்தனர். நிவாரண உதவிகளை வழங்குவதாக தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்திற்கு மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் உறுதி அளித்திருந்தனர். இந்த நிலையில் நிவர் புயல் ஏற்படுத்திய சேதங்களை கணக்கிட மத்திய அரசு, குழு ஒன்றை தமிழகத்திற்கு அனுப்பியுள்ளது. இந்த குழு டிசம்பர் 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழகத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. புரேவி புயல் காரணமாக  மத்திய குழுவின் தமிழக வருகை மாற்றியமைக்கப்பட்டது.

இந்நிலையில், புயல் சேதங்களை கணக்கிட நாளை தமிழகம் வருகிறது மத்திய குழு.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயல் பாதித்த பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளது மத்திய குழு. 4 நாள் பயணமாக வரும் மத்திய குழு, 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் சென்னையில் முதலமைச்சர் பழனிசாமியை மத்திய குழு சந்திக்கிறது. பின்பு,சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் புயலால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்கிறது. டிசம்பர் 8-ம் தேதி வரை புயலால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்கிறது.

இந்த குழுவில் டெல்லியில் உள்ள மத்திய வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர், மத்திய நிதித்துறை செயலாளர் (செலவினங்கள்), மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை செயலாளர், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை செயலாளர், மத்திய மின்சார துறை செயலாளர், மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை செயலாளர், மத்திய மீன்வளத்துறை செயலாளர், மத்திய நீர்வளத்துறை செயலாளர் ஆகிய 7 பேர் இடம் பெற்று உள்ளனர். சேதமடைந்தவர்களுக்கு எவ்வளவு நிவாரணம் வழங்குவது என்பதை கணக்கிட்டு அதுகுறித்த அறிக்கையை மத்திய அரசிடம் பின்னர் வழங்குவார்கள்.

Translate »
error: Content is protected !!