பைக் திருட்டு வழக்கில் 2 சிறுவர்கள் கைது: 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சென்னை,கொடுங்கையூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட 2 இளஞ்சிறார்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை, கொடுங்கையூர், எம்.ஆர்.நகர், வடிவுடையம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் பத்மாவதி (வயது 42).  கடந்த 7ம் தேதியன்று இரவு அவரது டியோ இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த போது வாகனம் திருடு போயிருந்தது. அது தொடர்பாக கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதனையடுத்து இருசக்கர வாகனத்தை திருடிய 17 வயது சிறுவர்கள் இருவரை கைது செய்தனர். 2 சிறுவர்கள் மீதும் கொடுங்கையூர், திரு.வி.க.நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து பத்மாவதியின் டியோ இருசக்கர வாகனம் உள்பட 5 இருசக்கர வாகனங்கள், 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பிறகு இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

Translate »
error: Content is protected !!