ரூ. 1.5 கோடி மோசடி: நடிகை சித்ராவின் கணவர் சிறையில் இருந்தபடியே மீண்டும் கைது

தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் எம்பிபிஎஸ் சீட் வாங்கித்தருவதாக ரூ. 1.05 கோடி மோசடியில் ஈடுபட்டதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாராால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்தவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இவரது கணவர் ஹேம்நாத். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத்தை டிசம்பர் மாதம் 14ம்  தேதியன்று நசரத்பேட்டை போலீசார் கைது செய்தனர். ஹேம்நாத் தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஹேம்நாத் ஜெ.ஜெ. நகரில் தனது வீட்டின் அருகில் வசித்து வந்த ஆஷா  மனோகரன் உள்பட 3 பேரிடம் கடந்த 2012ம் ஆண்டு எம்பிபிஎஸ் மெடிக்கல் சீட் வாங்கித்தருவதாக ரூ. 1 கோடியே 5 லட்சம் வாங்கி  மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2015ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக அப்படியே கிடப்பில் கிடந்தது.

தற்போது ஹேம்நாத் மனைவி சித்ராவை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில் சிறையில் உள்ள நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஹேம்நாத் மீதான மோசடி வழக்கு தொடர்பாக விசாரணையை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கையில் எடுத்துள்ளனர். அந்த மோசடி தொடர்பாக ஹேம்நாத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து அவரிடம் எம்பிபிஎஸ் சீட் மோசடி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!