ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி

ரோட்டில் வாக்கிங் சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள் செயின் பறிக்க முயன்றது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, தி.நகர் ராஜாம்பாள் தெருவைச் சேர்ந்த சத்தியநாராயணன் என்பவரது மனைவி சாதனா (வயது 49). நேற்று காலையில், சென்னை தி.நகர் ஜிஎன் செட்டி சாலையில் போத்திஸ் பொட்டிக் எதிரே உள்ள மேம்பாலத்தின் கீழ் உள்ள ரோட்டில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் பைக்கில் அந்த வழியாக வேகமாக வந்தனர். தலையில் ஹெல்மெட் அணிந்தபடி பின்னால் அமர்ந்திருந்த நபர் சாதனாவின் கழுத்தில் கிடந்த தாலிச்சங்கிலியை பறிப்பதற்காக இழுத்துள்ளார். ஆனால் நகை அறுபடாமல் கொள்ளையன் கையில் சிக்கவில்லை. கொள்ளையன் இழுத்த வேகத்தில் சாதனா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதுகுறித்து காவல்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றதும் பாண்டிபஜார் போலீசார் சம்பவ இடத்துக்கு அங்கு சென்று விசாரணை நடத்தினர். சாதனா கீழே விழுந்ததில் அவரது முழங்கால், கைகளில் சிராய்ப்புக்காயங்கள் ஏற்பட்டன. அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்றார். சாதனா அளித்த புகாரின் பேரில் போலீசார் நகை பறிக்க முயன்ற கொள்ளையன் யார் என்பது குறித்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி பாண்டிபஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சாதனா வாட்ஸ் அப் வீடியோ மூலம் தனக்கு நேர்ந்த அனுபவத்தை வாட்ஸ்அப்பில் போட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த வீடியோவில் சாதனா கூறியுள்ளதாவது, ‘‘நான் எனது தங்கச்செயினை மஞ்சள் கயிறுடன் சேர்த்து கட்டியிருந்ததால் கொள்ளையர்களால் அதனை அறுக்க முடியவில்லை. என்னை கீழே தள்ளி விட்டு விட்டு சிறிது துாரம் சென்று திரும்பிப்பார்த்தனர். அவர்கள் மீண்டும் வந்து என்னிடம் நகை பறிக்க வருவார்கள் என பயந்தேன். ஆனால் அவர்கள் பின்னால் முதுகுப்புறத்தில் இருந்து நீளமான வாளை உருவி மிரட்டினார்கள். பின்னர் எனது அருகில் வாக்கிங் சென்ற நபர்கள் ஓடி வந்ததும் தப்பித்து ஓடி விட்டனர். அதிகாலையில் வாக்கிங் செல்பவர்கள் இது போன்ற நபர்களிடம் உஷாராக இருங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!