வரதட்சணை கொடுமையால் உளவுத்துறை அதிகாரி மனைவி தற்கொலை: போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

சென்னை பெசன்ட் நகரில் மத்திய உளவுத்துறை அதிகாரியின் மனைவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ரூ. 20 லட்ச ரூபாய் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை, அடையாறு ராஜாஜி பவனில் உள்ள மத்திய உளவுத்துறையில், அதிகாரியாக பணிபுரிபவர் ஹரிஸ்குமார். இவரது மனைவி நிகிதா (வயது 23). விசாகப்பட்டினத்தை சேர்ந்த இருவருக்கும் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. பெசன்ட் நகர், பஜனைக் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருவரும் வசித்து வந்த நிலையில், கடந்த 25-ம் தேதி படுக்கையறையில் நிகிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது படுக்கையறையில் கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அதில் ‘‘இதற்கு மேல் தன்னால் வாழ முடியாது என்றும் தனது சாவுக்கு யாரும் காரணமில்லை” என நிகிதா தனது கைப்பட எழுதி வைத்திருந்துள்ளார். உடலை கைப்பற்றிய சாஸ்திரி நகர் போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சம்பவம் நடந்த அன்று பெண்ணின் கணவரான ஐ.பி அதிகாரி ஹரிஸ்குமாரும், அவரது தாயார் ரமணியும் வீட்டில் இருந்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் வரதட்சணை கொடுமை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த சாஸ்திரி நகர் போலீசார், திருமணம் நடந்து ஒரு வருடமே ஆனதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு பரிந்துரைத்தனர்.

இதையடுத்து திருமங்கலம் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி பிரேத பரிசோதனை முடிந்து பெண்ணின் குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைத்தனர். தற்கொலை செய்து கொண்டு நிகிதா பி.டெக் படித்துள்ளார். ஐ.பி அதிகாரியான ஹரிஸ்குமாருக்கும் நிகிதாவுக்கும் இரு வீட்டிலும் சேர்ந்து நிச்சயக்கப்பட்ட திருமணம் நடந்துள்ளது.

இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள். இருப்பினும் ரூ. 20 லட்சம் வரதட்சனை கொடுத்தால் மதம் ஒரு தடையல்ல என மணமகன் வீட்டார் முடிவெடுத்ததால் திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஆனால், திருமணத்திற்கு பிறகு மணமகனின் பெற்றோர் மணப்பெண் மதமாறச் சொல்லி வற்புத்தியாதாகவும், வரதட்சணை தொகையில் 17 லட்சம் பெற்றது போக மீதமுள்ள 3 லட்சம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் திருமணம் நடந்த ஒரு மாதத்திற்கு பிறகு நிகிதா தனது பெற்றோர் வீட்டில் தான் வசித்து வந்துள்ளார். பின்னர், கடந்த மாதம் நிகிதாவை அழைத்து வந்து பேச்சு வார்த்தை நடத்தி மணமகன் ஹரிஸிடம் விட்டுள்ளனர். ஹரிஸின் பெற்றோர் விசாகப்பட்டிணத்தில் வசித்து வரும் நிலையில், ஹரிஸின் தாயார் ரமணி மட்டும் மகன் – மருமகளை பார்ப்பதற்காக கடந்த வாரம் சென்னை வந்துள்ளார். ஹரிஸும், அவரது தாயாரும் வீட்டில் இருக்கும் போது தான் இந்த தற்கொலை நடந்திருப்பதால் பெண்ணின் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை நடந்திருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். வழக்கில் ஆர்.டி.ஓ விசாரணை முடிந்த பிறகு தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சாஸ்திரி நகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!