16 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்த பெண் உள்பட இருவர் கைது

சென்னை கிண்டியில் 16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் தள்ளி கொடுமை செய்த பெண் உள்பட இருவரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை, கிண்டி, மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் தன்னுடைய மகள் 16 வயது சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பதாகவும், மீனா என்ற பெண் தன்னுடைய மகளை கட்டாயப்படுத்தி ஜேசுராஜ் என்ற நபருடன் பாலியல் உறவில் ஈடுபடுத்தியதாகவும் புகார் அளித்தார்.

அது தொடர்பாக அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையில் கிண்டி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் லட்சுமி விசாரணை நடத்தினார். சிறுமியின் தாய் வேலைக்கு சென்ற சமயம் பார்த்து வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கட்டாயப்படுத்தி மீனா பாலியல் உறவில் ஈடுபடுத்தியது உண்மை என தெரிய வந்தது. அதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஜேசுராஜ் (வயது 42), குப்பம்மாள் (எ) மீனா (வயது 40) ஆகிய இருவரையும் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்தனர்.

மீனாவின் கணவர் குப்பை சேகரிக்கும் போது கிடைக்கும் பொருட்களை ஜேசுராஜின் பழைய பொருட்கள் வாங்கும் காயலாங் கடையில் போட்டு வந்துள்ளார். அந்த வகையில் மீனாவும், ஜேசுராஜும் பழகியுள்ளனர். இந்நிலையில் ஜேசுராஜ் கேட்டுக்கொண்டபடி மீனா, சிறுமியின் தாயார் வீட்டில் இல்லாததை சாதகமாக பயன்படுத்தி கட்டாயப்படுத்தி ஜேசுராஜுடன் பாலியல் உறவில் ஈடுபட வைத்துள்ளார் போன்ற தகவல்கள் தெரியவந்தன. விசாரணைக்குப் பின்னர் மீனா, ஜேசுராஜ் இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்றக்காவலில் சிறையில் அடைத்தனர்.

Translate »
error: Content is protected !!