இன்ஸ்டாகிராமில் மாணவியின் ஆபாசப் புகைப்படம்: 17 வயது சிறுவன் மீது போக்சோ

பிளஸ்1 மாணவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக பதிவு செய்த கன்னியாகுமரியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை சென்னை மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்தனர்.

சென்னை மயிலாப்பூர் ஆர்ஏ புரத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியின் முகத்தை ஆபாசப்படங்களுடன் பொருத்தி சமூக வலைதளங்களில் படங்கள் வெளியாகின. அதனைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் சென்னை அபிராமபுரம் போலீசில் புகார் அளித்தனர். மயிலாப்பூர் காவல் மாவட்ட சைபர்கிரைம் தனிப்பிரிவு உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். இதில் கன்னியாகுமரி மாவட்டம், நெடுவிளை கருங்கல் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தனது செல்போனில் இருந்து மாணவி தொடர்பான படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தது தெரியவந்தது.
அதனையடுத்து தனிப்படை போலீசார் கன்னியாகுமரி விரைந்து சென்று சிறுவனை கைது செய்தனர். அவன் மீது குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டமான போக்சோ, 13, 14 (1), 67 (பி) தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!