ஒரே நேரத்தில் 10 லட்சம் வழக்குகள் ரத்து….அதிரவைக்கும் தமிழக முதல்வரின் அறிவிப்பு

தென்காசி,

10 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்வது குறித்து அரசு கனிவுடன் பரிசீலிக்கும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தென்காசி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது இதனை அறிவித்தார். தமிழகம் முழுவதும் முதலமைச்சர் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். மாவட்டந்தோறும் சென்று சூறாவளி பிரச்சாரம் செய்து அண்ணா தி.மு..வுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

6வது கட்டமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிரச்சாரம் செய்துள்ளார். கடந்த 2 நாட்களாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பிரச்சாரம் செய்த எடப்பாடி, இன்று தென்காசி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தார்.

அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் அலைஅலையாக திரண்டு வந்து அமோக ஆதரவு அளித்து வருகிறார்கள். அம்மா அரசின் சாதனைகளை புள்ளி விபரங்களுடன் பட்டியல் போட்டு காட்டும் முதலமைச்சர், பல்வேறு துறைகளில் பெற்ற தேசிய விருதுகளையும் பெருமிதத்துடன் கூறி வருகிறார்.

வேண்டுமென்றே திட்டமிட்டு மக்கள் மத்தியில் அவதூறு பொய் பிரச்சாரம் செய்து மக்களை குழப்ப நினைக்கிறார் ஸ்டாலின். அவரது பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது என்று கூறிய முதலமைச்சர், அவருக்கு தக்க ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்து வருகிறார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (19–ந் தேதி) தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார்.- மத்திய அரசு, கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க கடந்த 25.3.2020 அன்று முதல் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததையடுத்து, தமிழக அரசும் பொதுமக்களின் நலனை கருதி ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதுடன், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் – 1939 மற்றும் தொற்று நோய் சட்டம் – 1937 ஆகிய சட்டங்களின் கீழ் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது.

இதனையடுத்து காவல்துறையினர், மாநிலம் முழுவதும் ஆங்காங்கு சோதனைச்சாவடிகள் அமைத்தும், வாகன தணிக்கை செய்தும் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டனர். மேலும், ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், கொரோனா தொற்று தொடர்பாக வதந்திகளை பரப்பியவர்கள், உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பியவர்கள் ஆகியோர் மீது சட்டப்படியாக நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக, மாநிலத்தில் சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்குகளுள், வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிகளில் –-பாஸ் பெற்று பயன்படுத்தியது மற்றும் காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் போன்றவைத் தவிர மற்ற அனைத்து வழக்குகளிலும் பொதுமக்களின் நலன் கருதி மேல் நடவடிக்கைகள் கைவிடப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேபோன்று, மத்திய அரசு, 1955–ம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில், குடியுரிமை திருத்த மசோதா 2019– கடந்த 4.12.2019 அன்று மக்களவையிலும், 11.12.2019 அன்று மாநிலங்களவையிலும் அறிமுகப்படுத்தி நிறைவேற்றியது.

இதனையடுத்து சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாநிலத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், உருவ பொம்மை எரிப்பு, சட்ட நகல் எரிப்பு, உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இப்போராட்டங்களின் போது காவல் துறையினர் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து சட்டம் ஒழுங்கை பராமரித்தனர்.

இப்போராட்டங்களின் போது தடையை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டங்களில் ஈடுபட்டதற்காகவும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காகவும், காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததற்காகவும் சுமார் 1,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இவ்வழக்குகளுள், வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் போன்றவைத் தவிர மற்ற அனைத்து வழக்குகளிலும் பொதுமக்களின் நலன் கருதி மேல் நடவடிக்கைகள் கைவிடப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதற்கு எதிராக அந்தப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தின் போது, பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த பகுதி மக்கள் தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கையை பரிசீலித்து பல வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தற்போது சில வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. மேலும், சில வழக்குகள் முதல் தகவல் அறிக்கை நிலையில் உள்ளது. அந்தப்பகுதி மக்கள் தங்கள் மீது உள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை மனுவினை என்னிடம் அளித்துள்ளனர். அந்த கோரிக்கை சட்டத்திற்குட்பட்டு அரசு கனிவோடு பரிசீலிக்கும் என்ற செய்தியினை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.

 

Translate »
error: Content is protected !!