இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர்களுக்கு அதிபர் ஜோ பைடன் பாராட்டு

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர்கள் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறீர்கள் என்று அதிபர் ஜோபைடன் பாராட்டி உள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோபைடன் கடந்த ஜனவரி மாதம் 20-ந் தேதி பதவி ஏற்றார். அவர் தனது அரசு நிர்வாகத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு முக்கிய பொறுப்புகளை கொடுத்து வருகிறார். பொருளாதாரம், நிதி மற்றும் மருந்து போன்ற முக்கிய துறைகளில் அமெரிக்க வாழ் இந்தியர்களை நியமனம் செய்துள்ளார்.

சமீபத்தில் நாசா அனுப்பிய விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விஞ்ஞானி சுவாதி மோகன் முக்கிய பங்காற்றினார். இந்த நிலையில் அமெரிக்க வாழ் இந்தியர்களை அதிபர் ஜோபைடன் வெகுவாக பாராட்டி உள்ளார். நாசா விஞ்ஞானிகளுடன் காணொலி மூலம் நடந்த உரையாடலில் ஜோபைடன் பேசியதாவது:-

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர்கள் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறீர்கள். நீங்கள் (சுவாதி மோகன்) என்னுடைய துணை அதிபர் கமலா ஹாரீஸ் மற்றும் என்னுடைய பேச்சை எழுதி தரும் வினய் ரெட்டி ஆகியோர் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றார். ஜோபைடன் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளில் 55 அமெரிக்க வாழ் இந்தியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!