வரி மோசடி செய்பவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

சேவை வரி மோசடி செய்பவர்கள் மீதும் இதைக் கண்காணிக்க தவறிய அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி எச்சரித்துள்ளார்.

சென்னை,

வணிகத்தில் ஈடுபடாத சில அமைப்புகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளையும் வரி செலுத்தும் நபராகப் பதிவு செய்து, அதன் மூலம் சரக்கு அல்லது சேவைகளை வழங்காமல் போலிப் பட்டியல்கள் மூலம் பயனாளருக்கு மோசடியாக உள்ளீட்டு வரி வரவை மாற்றுவது தமிழ்நாடு வணிக வரித்துறைக்கு தெரிய வருகிறது.

இந்தப் பயனாளர்கள், இதுபோன்ற மாயையான பரிவர்த்தனைகளில் உள்ளீட்டு வரி வரவு எடுப்பதன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி வருகின்றனர். போலிப் பட்டியல்கள் வழங்குதல், போலிப் பட்டியல்கள் வழங்குவதற்கு எவ்வகையிலேனும் உடந்தையாக இருத்தல் மற்றும் போலி பட்டியல்கள் மீது உள்ளீட்டு வரி வரவு எடுத்தல் ஆகியவை தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017 இன்படி அதிகபட்சமாக ஐந்து ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கத்தக்க குற்றமாகும்.

மேலும், மோசடியாகப் பெறப்பட்ட உள்ளீட்டு வரி வரவு, அதற்குரிய வட்டி மற்றும் அபராதத் தொகையுடன் வசூலிக்கப்படும். எனவே, மேலே கூறப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017 இன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி எச்சரித்துள்ளார். மேலும், இதுபோன்ற தவறுகளை கண்காணிக்க தவறும் வணிகவரித்துறை அலுவலர்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!