திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட வ உ சி பேரவையினர் மீது போலீசார் தடியடி

பட்டியலினத்தில் உள்ள ஏழு உட்பிரிவுகளை சேர்ந்தவர்களை தேவந்திர குல வேளாளர் என்கிற பொது பெயரில் அழைக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார். முதலமைச்சரின் இந்தப் பரிந்துரைக்கு வெள்ளாளர் சங்கத்தினர் மற்றும் வஉசி பேரவையினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்திலும், ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே வஉசி பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். அப்போது வாகனத்தில் ஏற மறுத்ததால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்களை காவல்துறையினர் அடித்து வாகனத்தில் ஏற்றினர். வாகனத்தில் இருந்த ஒரு நபர் மது பாட்டிலை காவல்துறையினர் நோக்கி வீசினார்.

அந்த மதுபாட்டில் காவலர் ஒருவர் மீது பட்டு சிதறியது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். தடியடியை தொடர்ந்து போராட்டக்காரர்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினர். தொடர்ந்து தப்பி ஓடியவர்களை காவல்துறையினர் விரட்டிப் பிடித்து கைது செய்தனர்.இந்த தடியடி சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

POLICE ARREST VIDEO:

 

Translate »
error: Content is protected !!