நீலாங்கரையில் செயின் பறிப்பு கொள்ளையர்கள் கைது சிசிடிவி மூலம் துப்பு துலக்கிய தனிப்படை போலீஸ்

ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளையனை சிசிடிவி பதிவுகளை ஒன்று விடாமல் ஆய்வு செய்து நீலாங்கரை போலீசார் கைது செய்தனர்.

அது பற்றிய விவரம் வருமாறு:–

சென்னை, ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாமூர்த்தியின் மனைவி கடந்த 18ம் தேதியன்று அந்த பகுதியில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர். போலீசில் மாட்டாமல் இருக்க அவர்கள் பைக்கின் பின்னால் நம்பர் பிளேட்டில் வேப்பிலையை கட்டி மறைத்திருந்தனர். இது குறித்து நீலாங்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையில்உதவிக்கமிஷனர் விஸ்வேஸ்வரய்யா தலைமையில் எஸ்ஐ தமிழன்பன் மற்றும் தலைமைக் காவலர்கள் முகிலன், பிரதீப்குமார், ஜானி, விஐய், கிரி மற்றும் முதல்நிலை காவலர் இன்பராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை தனிப்படையினர் ஆய்வு செய்ததில் கொள்ளையர்கள் முகத்தில் மாஸ்க் அணிந்ததாலும் வண்டியின் பதிவெண் மறைக்கப்பட்டிருந்ததாலும் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.

கொள்ளையர்கள் வந்து சென்றது சிவப்பு நிற டியோ வாகனம் என்று மட்டும் தெரியவந்தது. அதனடிப்படையில் செயின்பறிப்புச் சம்பவம் நடந்த சமயத்தில் ஓம்ஆர் மற்றும் ஈசிஆர் சாலையில் அனைத்து சிசிடிவி கேமாராக்களையும் கடந்து சென்ற இருசக்கர வாகனங்களை ஆய்வு செய்ததில் கருணாமூர்த்தியின் மனைவியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது பிரபல கொள்ளையன் நடராஜ் (எ) நவமணி (வயது 28) என தெரியவந்தது. திருப்போரூரில் பதுங்கியிருந்த நடராஜை போலீசார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். அவனிடமிருந்து 5 சவரன் செயின் பறிமுதல் செய்யப்பட்டது. விடாமுயற்சியுடன் குற்றவாளியை அடையாளம் கண்டு கைது செய்து தங்க செயினை கைப்பற்றிய தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டி வெகுமதிகள் வழங்கினார்.

Translate »
error: Content is protected !!