சென்னை, தண்டையார்பேட்டை, சிவாஜி நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் கரிகாலன் (வயது 64). நேற்று முன்தினம் மதியம் ஆர்.கே. நகர் வைத்தியநாதன் மேம்பாலம் கீழ் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத நபர் 1 அடி நீளம் கொண்ட கத்தியை காட்டி கரிகாலனிடம் பணம் கேட்டு மிரட்டினார்.
அது தொடர்பாக ஆர்.கே. நகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனையடுத்து ஆர்.கே. நகர் போலீசார் சிசிடிவி கேமரா மூலம் குமரா (எ) குமரன் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் குமரா மீது கொலை முயற்சி உட்பட 10 குற்ற வழக்குகள் உள்ளன. மேலும் இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. அவரிடமிருந்து 1 அடி நீளமுள்ள 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட குமரா (எ) குமரன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.