நீட் தேர்வு மோசடி: மாணவி, தந்தையைப் பிடிப்பதில் சிக்கலில் போலீசார்

நீட் தேர்வு கலந்தாய்வில் போலி சான்றிதழ் சமர்ப்பித்து போலீசாரால் தேடப்பட்டும் வரும் மாணவி மற்றும் அவரது தந்தையை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

நீட் தேர்வில் 27 மதிப்பெண் மட்டுமே பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த திக்சா எனும் மாணவி 610 மதிப்பெண் பெற்ற ரித்திகா என்னும் மாணவியின் மதிப்பெண் சான்றிதழை கொடுத்து மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்டார். அவர் சமர்ப்பித்த சான்றிதழ் போலி என்று தெரிய வந்ததும் அது தொடர்பாக மருத்துவக்கல்வி கூடுதல் இயக்குனர் செல்வராஜன் சென்னை பெரியமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மருத்துவ கலந்தாய்வில் போலி சான்றிதழ் சமர்ப்பித்த மாணவி திக் ஷா மற்றும் அவரது தந்தை பல் மருத்துவர் பாலச்சந்தர் ஆகியோரின் மேல் 6 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து மூன்று முறை சம்மன் அனுப்பியும், மாணவியும் அவருடைய தந்தையும் காவல் நிலையத்தில் ஆஜராக வில்லை. இதனால் அவர்களை கைது செய்ய கோர்ட் மூலம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவி மற்றும் அவருடைய தந்தை செல்போன் உபயோகத்தில் இல்லாத காரணத்தினால் அவர்களை கண்டறிய போலீசார் சைபர்கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவி திக் ஷா மற்றும் அவருடைய தந்தை பாலச்சந்தர் இருவரிடமும் தொடர்பில் இருந்த அனைவரது செல்போன் எண்களும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளதால் அவர்களை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!