நுங்கம்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் புரோக்கர் குத்தி கொலை

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ரியல் எஸ்டேட் புரோக்கர் பீர்பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை, நுங்கம்பாக்கம், காம்தார் நகரில் நேற்று அதிகாலையில் நிர்வாண நிலையில் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. நுங்கம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்டது யார் என்பது தெரியவந்தது. கொலை நடந்த வீட்டில் வசித்து வரும் காசிம் என்பவர், சொந்த ஊரான கீழக்கரைக்கு சென்று விட்டார். காசிமின் டிரைவர் ஓட்டுனர் பழனி மட்டும் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

அப்போது ரியல் எஸ்டேட் புரோக்கர் காதர் என்பவர், அவருடைய நண்பரான பழனியை பார்க்க நேற்று முன்தினம் அங்கு வந்துள்ளார். புத்தாண்டு என்பதால் பழனியும், காதரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது பழனியின் சகோதரர் ஆட்டோ டிரைவர் முஸ்தபா மற்றும் அவருடைய நண்பரும் பழனியை பார்க்க வந்துள்ளனர். அனைவரும் இணைந்து கூட்டாக மது அருந்தி உள்ளனர். அப்போது முஸ்தபா அவருடைய சகோதரர் பழனியிடம், தனது அவருடைய தாயாருக்கு சரியாக பணம் செலவுக்கு தருவதில்லை என கூறி பழனியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதை பார்த்த காதர், பழனிக்கு ஆதரவாக முஸ்தபாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முஸ்தபா குடிபோதையில் கையில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து காதர் வயிற்றில் குத்தி விட்டு, அவருடைய நண்பருடன் தப்பியோடிவிட்டார்.

கொலை செய்துவிட்டு தப்பியோடிய முஸ்தபாவின் கூட்டாளியை பிடித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய முஸ்தபா மற்றும் காதரின் உடலை வீட்டு வாசலில் தூக்கி போட்டு விட்டு தலைமறைவாக உள்ள பழனி என இருவரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். கொலை நடந்த வீட்டில் உள்ள கொலையாளிகளின் கைரேகைகள் மற்றும் ஆதாரங்களை தடயவியல் துறை நிபுணர்கள் சம்பவ இடத்தில் சேகரித்துள்ளனர். அருகில் உள்ள சிசிடிவி கேமாரவில் கொலையாளிகள் ஆட்டோவில் தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!