சின்னத்திரை நடிகையிடம் திருமண ஆசை காட்டி ஆபாச படம் எடுத்து பணம் பறிப்பு * காதலனை தேடுது போலீஸ்

சென்னையில் சின்னத்திரை நடிகையை காதலித்து திருமணம் செய்வதாக கூறி ஆபாசப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை, கிழக்கு முகப்பேர் பகுதியைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை ஒருவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். 11 தமிழ்ப்படங்கள் மற்றும் டிவி நடிகையாகவும் நடித்துள்ளார். தனது தோழி மூலம் அறிமுகமான கீழக்கட்டளையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நிகழ்ச்சிகளை எடுத்து நடத்தும் தொழில் செய்து வரும் ராஜேஷ், விடுதி ஒன்றுக்கு அழைத்து ஆசை வார்த்தை காட்டி பாலியல் ரீதியாக நடிகையிடம் தகாத உறவு வைத்துள்ளார். அதன்பின் திருமண தேதி நெருங்க நெருங்க ராஜேஷ் நடிகையிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். அது தொடர்பாக ராஜேஷிடம் நடிகை கேட்டபோதும் தவிர்த்து வந்துள்ளார்.

மேலும் நடிகையுடன் நெருக்கமாக இருந்த ஆபாசப் புகைப்படங்களை காட்டி மிரட்டி சுமார் ரூ. 2 1/2 லட்சம் வரையில் வாங்கியுள்ளார். மேலும் ரூ. 10 லட்சம் பணம் கொடுத்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வதாக ராஜேஷ் நடிகையிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடிகை திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. மேலும் ராஜேஷ் வசித்து வரும் மடிப்பாக்கம் பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை என கூறப்படுகிறது. அதனையடுத்து நீதிமன்றத்தில் நடிகை புகார் மனு தாக்கல் செய்தார். அதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி கோர்ட் உத்தரவிட்டது. அதன்பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ராஜேஷ்குமார் மீது பாலியல் வன்கொடுமை செய்தது, மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவான ராஜேஷை தேடி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!