பயன்பாட்டுக்கு வந்துள்ளதா சமூக நலக்கூடம் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாட்கோ (TAHDCO) நிறுவனத்தால் 12 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமூக நலக்கூடம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மனுதாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இதுதொடர்பாக வழக்கறிஞர் சபரிநாதன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள அனுமந்தல் கிராமத்தில் நபார்ட் வங்கி உதவியுடன் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகமான தாட்கோ சார்பில் கடந்த 2008-2009ம் நிதியாண்டில் 15 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் சமூக நலக்கூடம் கட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டே கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னரும், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்படாமல் இருப்பதாகவும், இதன் காரணமாக சமூக நலக்கூடம் பாதிப்படைந்து வருவதோடு, மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே சமூக நலக்கூடத்தை உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சமூக நலக்கூடம் பயன்பாட்டிற்கு வந்துவிட்டதாகவும், ஆனால் அப்பகுதி மக்கள் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளை அருகில் உள்ள கோவில் மற்றும் வேறு மண்டபங்களில் நடத்துவதாக தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் அரசு சார்பில் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டங்களை இந்த மண்டபத்திலேயே நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், சமூக நலக் கூடம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதா என தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மனுதாரருக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Translate »
error: Content is protected !!