ஏழுமலையான் தரிசனத்திற்காக, ‘ஆன்லைன்’ வாயிலாக தரிசன டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பக்தர்களுக்கு, 90 நாட்கள் வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை நாடு முழுதும் வேகமாக பரவி வரும் நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் இலவச தரிசனத்தை முற்றிலும் ரத்து செய்துள்ளது. ஆன்லைன் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, இம்மாதம், 21 முதல், 30ம் தேதி வரை தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள், ஊரடங்கு காரணமாக வரமுடியாத சூழ்நிலை ஏற்படும் நிலையில், அவர்கள், 90 நாட்களுக்குள் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என, தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், காய்ச்சல், சளி, இருமல். உடல்வலி உள்ளிட்டவை உள்ளவர்கள் திருமலைக்கு வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.