வலுக்கிறது வடகிழக்கு பருவமழை: பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வலுவடைந்துள்ளது; அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மற்று உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில், குமரிக்கடல் முதல் வட தமிழகம் வரை, மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது; இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும்.

அதேநேரம் கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். மேலும் அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடைவெளி விட்டு மழை தொடரும். நகரின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!