உங்களின் முழு ஒத்துழைப்பு தேவை.. அப்ப தான் எண்ணிக்கை குறையும் – சுகாதார துறை இயக்குநர்

பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனா தொற்றின் எண்ணிக்கை  முழுமையாக குறையும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.

யுனிசெப், உலக சுகாதார நிறுவனம், தெற்கு ரயில்வே, தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனரகம், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம்  இணைந்து ரயில் பயணிகளுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை எம் ஜி ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் திரு. அண்ணாதுரை ஆகியோர்  தலைமை வகித்து கொரோனா விழிப்புணர்வு தொடர்பான கருத்துக்கள் அடங்கிய பதாகைகள், வீடியோக்களை வெளியிட்டனர்.

பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பொது சுகாதார துறை இயக்குநர், ரெம்டெசிவர் உயிர்காக்கும் மருந்து அல்ல. இதனை தனியார் மருத்துவர்கள் தேவையில்லாமல் பொதுமக்களுக்கு பரிந்துரைக்கின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்து கட்டாயம் அல்ல. அரசு மருத்துவமனைகளில் ரெம்டெசிவர் மருந்து போதிய அளவில் இருப்பு உள்ளது.

தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், பொதுமக்களிடம் ரெம்டெசிவர் மருந்து கேட்டு அலைக்கழிக்க கூடாது. மேலும் பொதுமக்கள் அவசியமில்லாமல் இம்மருந்துக்காக காத்திருக்க தேவையில்லை. தற்பொழுது சென்னையில் மட்டும் ரெமிடெசிவர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழகம் முழுவதிலும் உள்ள முக்கிய மருத்துவமனைகளிலும் ரெமிடெசிவர் மருந்தை விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்த மத்திய அரசிடம் 1.50 கோடி தடுப்பூசிகள் கேட்கப்பட்டுள்ளன. அவை கிடைத்தவுடன் தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் தொடங்கப்படும். தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதித்ததன் காரணமாக கொரோனா பரவல் சற்று குறைந்து வருகிறது. பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இருக்கும் பட்சத்தில் முழுமையாக  தொற்றின் எண்ணிக்கை குறையும் என்று தெரிவித்தார். தொடர்ந்து கொரோனா தடுப்பு உபகரணங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

Translate »
error: Content is protected !!