மளிகைக்கடையில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற கொள்ளையன் கைது செய்த வேளச்சேரி போலீஸ்

சென்னை வேளச்சேரியில் மளிகைக்கடைக்கு சாமான்கள் வாங்க வந்த இளம்பெண்ணை மானபங்கப்படுத்த முயன்ற திருட்டு வழக்கில் தொடர்புடைய ஆசாமியை போலீசார் செல்போன் மூலம் வந்த புகாரின் பேரில் கைது செய்தனர்.

சென்னை, வேளச்சேரி நேரு நகரில் மளிகைக் கடை நடத்தி வருபவர் குமாரசாமி. இவரது கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக இளம்பெண் ஒருவர் வந்தார். அப்போது அங்கு வந்த போதை ஆசாமி அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதனை கண்டித்த குமாரசாமியை அந்த நபர் தாக்கி கல்லால் அடித்துள்ளார். இது தொடர்பாக குமாரசாமி தனது செல்போன் மூலம் வேளச்சேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். துணைக்கமிஷனர் விக்ரமன் உத்தரவின் பேரில் அங்கு ரோந்துப் பணியில் இருந்த எஸ்ஐ பெருமாள் மற்றும் முதல் நிலைக்காவலர் இளையராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற அந்த நபரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த நபர் பெயர் ரெக்க ஜெய் (எ) ஜெயகுமார் (வயது 24) என்பதும் தெரியவந்நதது.

மேலும் ஜெயகுமார் மீது வண்ணாரப்பேட்டை, மாதவரம் பகுதியில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதும் போலீசார் விசாரணையில் வெளிவந்தது. அதனையடுத்து விசாரணைக்குப்பின்னர் ஜெயகுமாரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர். ரோந்துப்பணியில் விழிப்புடன் செயல்பட்டு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து குற்றவாளியை கைது செய்த வேளச்சேரி போலீசாரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார்.

Translate »
error: Content is protected !!