வீட்டில் இருந்தபடி உலகை வலம் வரும் சாதனை தமிழச்சி

இந்த காலகட்டத்தில் பெண்கள் சாதனைகளை படைக்க முடியுமா என்ற ஏக்கங்களுடன் காலங்களை நகர்த்தி செல்லும் நிலையில், நமக்கு எதுக்கு வம்பு பெண்ணாக பிறந்தோமா ஏதோ படித்தோமா? திருமணம் செய்து குழந்தைகளை பெற்றோமா இதுவே போதும் என்று பயணிக்கின்றனர் 90 விழுக்காட்டினர்.

ஆனால் ஆணாதிக்கம் நிறைந்த இந்த உலகில் ஏதாவது ஒரு சாதனை செய்து உலக மக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்ற முனைப்புடன் ஆங்காங்கே பெண்கள் மனித குலத்துக்கான விதைகளை விதைத்து வருகின்றனர்.

இதில் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் உள்ள கிராமங்களில் இருந்து புறப்பட்ட தாய்மார்களும் உண்டு என்பது நம்மை மட்டும் அல்ல மேற்கத்திய நாட்டினரையே வியப்பில் ஆழ்த்துகிறது என்பதே தமிழக மக்களுக்கு கிடைத்த பெருமை ஆகும்.

இந்த சாதனை தமிழச்சிகளின் அணிவகுப்பில் இதுவரை நமது கண்களுக்கு தென்படாமல் இருந்த கரூரை சேர்ந்த குடும்பத்தலைவி திருமதி ரேணுகா ராமசாமி என்பவரை பற்றிய வரலாற்று தொகுப்புதான் இது…

கரூரை சொந்த  ஊராக கொண்ட ரேணுகாராமசாமி.. தற்போது இருப்பது ஜெர்மனி என்னும் ஐரோப்பிய நாட்டில்,,முன்னதாக தனது பள்ளி படிப்பை திருச்செங்கோட்டிலும், கல்லூரி படிப்பை பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியிலும் முடித்து பி.டெக் ஐடி பட்டம் பெற்ற ரேணுகா கேம்பஸ் நேர்முக தேர்வில் பணிக்கு தேர்வாகி சென்னையில் 6 மாதங்களும், பின்னர் பெங்களூருவிலும் தனது பணியை தொடர்ந்தார். கணவர் பிரபாகரனும் இதே துறையை சார்ந்தவர் என்பதால் அவர் ஜெர்மனிக்கு பணி நிமித்தமாக சென்று விட்டார். இந்தநிலையில் தற்போது ஜெர்மனி சென்றுள்ள ரேணுகா வீட்டில் இருந்தபடியே உலகத்தை ஒரு சுற்று சுற்றி வருகிறார். அது எப்படி என கேட்கிறீர்களா?

உடற்பயிற்சி மற்றும் விளையாட்டில் தீராத ஆர்வம் கொண்டவர் ரேணுகா.திருமணம் ஆகி குழந்தைகள் பெற்ற பின்னரும் உடற்பயிற்சி மூலம் உடலை பேணி வருகிறார். தாம் மட்டும் உடலை பேணுவது போதாது பிற பெண்களுக்கும் தமது உடற்பயிற்சிகளை கற்று தரவேண்டும் என்ற ஆர்வத்துடன் களம் இறங்கி உள்ளார். எப்படி பள்ளி ஆரம்பித்துதான பயிற்சி தரவேண்டுமா என்ற கேள்வி எழுந்தநிலையில் கொரோனா காலம் ரேணுகாவுக்கு ஆன்லைன் மூலம் கைகொடுத்ததாக சொல்கிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பெங்களூருவில் இருந்தபடி உலகின் பல பகுதிகளில் உள்ள பெண்களுக்கு பிட்னஸ் என்னும் உடற்பயிற்சி அளித்து வந்த ரேணுகா தற்போது ஜெர்மனிலும் வீட்டில் இருந்த படி உலகநாடுகளில் உள்ள தமிழர்களுக்கும் பிற மக்களுக்கும் பிட்னஸ் கற்று கொடுத்து தனது கடுமையான உழைப்பின் முத்திரையை பதித்து வருகிறார்.

ஜெர்மனியில் உள்ள அவரை முகநூலில் அறிமுகம் ஆகி வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்ட போதுதான் அவரின் சாதனை துளிகளும் அவருக்குள் இருந்த ஒரு விளையாட்டு வேட்கையும் தெரியவந்தது.

தற்போதும் அவரிடம் கர்நாடகாவை சேர்ந்த பெண்கள் மட்டும் இன்றி சிங்கப்பூர், துபாய்,கத்தார், அமெரிக்கா, என பல நாடுகளில் வசிக்கும் இந்தியார்கள் பிட்னஸ் பயிற்சி பெறுகின்றனர். கல்லூரி காலத்தின் போது தாம் மட்டுமே தனி ஆளாக ஜிம்முக்கு சென்று அதனை பயன்படுத்தி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்ததாக கூறும் ரேணுகா ,தனது வாழ்வில் இந்த தமது விடா முயற்சியே தற்போது பிறருக்கு பிட்னஸ் வழங்கும் அளவிற்கு தன்னை முன் நிறுத்தி இருப்பதாகவும் மகிழ்ச்சி பொங்க கூறுகிறார்.

எதிர் காலத்தில் பிட்னஸ் பள்ளி ஒன்றை தொடங்கி அதன் மூலமும் உடற்பயிற்சி கலையை கற்று தருவதே தமது லட்சியம் என கூறுகிறார். பெண்கள் மட்டும் அல்ல இவரிடம் ஆண்களும் பயிற்சி பெறுகிறார்கள் என்பதுதான் சிறப்பு அம்சமாகும்.இரு பாலாருக்கும் பயிற சி தரும் பணி என்பது மிகவும் கடினமான ஒன்று. அதனை தனது சாதனை படிக்கட்டுகளாக மாற்றி வருகிறார் சாதனை திலகம் ரேணுகா ராமசாமி.பெண்கள் சாதனைகளை புரிந்து முன் உதாரணமாக திகழும் இந்த காலகட்டத்தில் ரேணுகா தொட்டுள்ள உடற்பயிற்சி என்னும் ஆரோக்கிய வாழ்விற்கான வழிமுறை கற்றுதரும் முறை அவரை மேலும் பல அடி உயரத்துக்கு அழைத்து செல்லும் என்பதில் ஐயமில்லை .அவரது பணி சிறக்க அனைவரும் வாழ்த்துவோம்….

Translate »
error: Content is protected !!